கீழடி அகழ்வாராய்ச்சியின் தொல்பொருட்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே நன்கு வணர்ச்சி அடைந்த தமிழ் வரிவடிவம் மற்றும் நாகரீகத்தின் சான்றுகளை பறைசாற்றுகின்றது. தற்போதைய காலத்தில் எமக்குக் கிடைக்கும் அச்சிலுள்ள தமிழ் இலக்கியங்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை இருந்த மூன்று சங்க காலப் பகுதிகளைச் சேர்ந்தவை என்று கணக்கிடப்படுகிறது.
ஒரு மொழியின் வரிவடிவம் மற்றும் எழுதுதல் அமைப்பு (writing system) தாமாகவே பத்திரங்களையும் கோப்புகளையும் (பதிவுகள்) கைப்பற்றி (capture), உருவாக்கி (create) அதனைப் பேணிப் பாதுகாக்க வழிவகுக்காது. பதிவுகளை உருவாக்காவிடின் ஆவணங்கள் உருவாகாது. ஏனெனில் இன்றைய பதிவு நாளைய வரலாற்று ஆவணம் ஆகும். ஆனால் பதியப்படாத வரலாறு என்பதால் ஒரு வரலாறு நிக்ழவில்லை என்று அர்த்தமல்ல.
மறுபுறம், சங்க காலத்தில் ரோமானிய பேரரசுடன் தமிழர்கள் மேற்கொண்ட கடல் வழி வணிகம், அவர்களின் கடல் வணிக நிர்வாகத்திற்கான பதிவுகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. அதாவது பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் செயல்முறைகள் இருந்திருக்க வேண்டும். ரோமானியப் பேரரசுடனான தமிழ் கடல் வணிகம் குறித்து கிடைக்கக்கூடிய அச்சுரு (printed) ஆவணங்கள் வேற்று மொழி ஆவணப் பொருட்களாக உள்ளன. என்றாலும் அவை இன்றிவமையாதவை. உதாரணமாக, கிரேக்க-ரோமானிய கையேட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பான “The Periplus of the Eritrean Sea” (1912)1. இதனை வில்பிரட் எச். ஷாஃப் (Wilfred H. Schoff) மொழிபெயர்த்துள்ளார். இதன் மூலக் கையேடு துறைமுகங்கள் மற்றும் கடலோர அடையாளங்களை பட்டியலிடும் கையெழுத்துப் பிரதி ஆவணமாகும். ஒரு கப்பலோட்டி (captain) கரையோரங்களில் எதிர்பார்க்கக்கூடிய தோராயமாக தலையிடும் இடைவெளிகளும் இதில் உள்ளடங்கும். கடல் வர்த்தகத்தில் உள்ள வணிக நடைமுறைகள், துறைமுகங்களில் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் (சுங்க விதிகள்), தென்னிந்தியாவில் உள்ள பண்டைய தமிழகத்திற்கு2 வந்த வர்த்தகர்கள் பற்றிய விவரங்கள் (ரோமன், அரேபியா, மற்றும் இன்றைய இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து வந்த வணிகர்கள்). அத்துடன் வணிக நிகழ்வுகள் மற்றும் முக்கிய வர்த்தக பொருட்கள் பற்றிய விவரங்கள் உள்ளடங்கும்.
படம்: வலைஒளி: “வரலாற்றியல் நோக்கில் தமிழர் பண்பாட்டு அடையாளங்கள்” என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு, 2020.
நிர்வாகத்திற்கான இன்னுமோர் சான்று பண்டய அச்சுக்கள் (stamp/ seal). சங்க காலத்தில் பயன்படுத்திய இவ்வச்சுக்கள் கீழடி அகழ்வாராய்ச்சியின் ஆறாவது கட்டப் பணியில் காண்டெடுக்கப்பட்டவை. தினமலர் தேசிய தினசரியின் அடிப்படியில், இவை பண்டைய ஆமை உருவத்தில் அமைக்கப்பட்ட அச்சுக்கள் ஆகும். ஒரு நாட்டை விட்டு வெளியேறும் மற்றும் நுழையும் நபர்களை அடையாளம் காண இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் இதைக் கண்காணிக்க அதிகாரிகளால் அமுல்படுத்தப்பட்டிருக்கலாம். வெளிநாட்டவர்களை திறம்பட நிர்வகிக்கவும் அடையாளம் காணவும் அச்சுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தமிழ் தனது வரிவடிவம், எழுத்து நடைமுறை, நாகரீகம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றிற்கு இத்தகைய பண்டய வரலாற்றைக் கொண்டிருக்கும்போது, ஏன் பதிவுவேடு மற்றும் ஆவண நடைமுறைகள் வாய்மொழி வரலாறாக உருமாறியது?
பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் வரலாற்றின் தொடர்ச்சியைப் பேணிப் பாதுகாக்கின்றன. தமிழர்களிடையே பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லாததற்கு பல்வேறு தொடர்ச்சியான காரணிகள் உள்ளன. உதாரணமாக, இடப்பெயர்வுகள், படையெடுப்புகள், காலனித்துவம், ஆளுகை பறிமுதல், போர் மற்றும் இராணுவமயமாக்கல். இதன் விளைவாக, எஞ்சியிருக்கும் வாய்மொழி வரலாற்றை ஒலி அல்லது ஒளி வடிவங்களில் ஆவணப்படுத்த3 வேண்டிய அவசியம் உள்ளது. ஒலி அல்லது ஒளி வடிவத்தில் வாய்மொழி வரலாற்றை பதிவு செய்வது என்பது புனரமைப்பு (reconstruction) அல்லது மீள்-வளங்கலுக்கான (re-presentation) வடிவங்கள் ஆகும். இது ஒரு முன் திட்டமிடப்பட்ட, இயக்கப்பட்ட அல்லது தொகுக்கப்பட்ட பொழுதுபோக்கு அல்லது வர்த்தகத்திற்கான ஓர் ஊடகத் தயாரிப்பு அல்ல. இருப்பினும், வாய்மொழி வரலாற்றைக் கூறும் நபர்களின் தனிமனித உரிமைக் கொள்கை (privacy) மற்றும் இரகசியத்தன்மையின் (confidenciality) அடிப்படையில் சில தணிக்கைகள் செய்யப்பட்டிருக்கும்.
இக்கட்டுரையின் எழுத்தாளர் ஓர் உள்ளூர் வரலாற்று நூல் திட்டத்திற்காக நோர்வேக்கு புலம்பெயர்ந்த முதல் தலைமுறை தமிழர்களை நேர்காணல் செய்து வருகின்றார். இன்நூல் திட்டம் DsporA Tamil Archive இன் திட்டமாக ஆரம்பிக்கப்படவில்லை. அந்த உள்ளூர் வரலாற்று நூல் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட நேர்காணல் வழிகாட்டி மாற்றியமைக்கப்பட்டு இங்கு வழங்கப்படுகின்றது.
உள்ளூர் வரலாற்று நூல் திட்டத்திற்காக, இக்கட்டுரையின் எழுத்தாளர் Memoar மற்றும் Minner.no வை தொடர்பு கொண்டிருந்தார். அத்தொடர்வில் வாய்மொழி வரலாறு பற்றிப் பெற்றுக் கொண்ட தகவல்கள் இங்கு வழங்கப்படுகின்றது.
உள்ளடக்கம்:
- அறிமுகம்
- வாய்மொழி வரலாறு என்றால் என்ன?
- வாய்மொழி வரலாறு: எடுத்துக்காட்டுகள்
- வாய்மொழி வரலாறு: “நோர்வே வாழ் தமிழர்களின் புலப்பெயர் வாழ்க்கை” நேர்காணல் வழிகாட்டி
- வாய்மொழி வரலாறு: நேர்காணல் செயல்முறை
- Minner.no மற்றும் Memoar.no முறைமைகள்
- வாய்மொழி வரலாறு: அனுகூலங்கள், பிரதிகூலங்கள்
- வாய்மொழி வரலாறு எதிராக ஒலி-, ஒளி- அல்லது எழுத்துரு அடிப்படையிலான ஊடக தயாரிப்புகள்
- வாய்மொழி வரலாறு: வடிவங்கள்
- வாய்மொழி வரலாறு: தனியுரிமை மற்றும் பேச்சுச் சுதந்திரம்
- வாய்மொழி வரலாறு: உரிமை
- வாய்மொழி வரலாறு: தோற்றம்
- வாய்மொழி வரலாறு: பேணிப் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு
- வாய்மொழி வரலாறு: நிறுவனங்கள்
- Aavanaham.org
- Minner.no
- Memoar – வாய்வழி வரலாற்றிற்கான நோர்வேயிய அமைப்பு (Memoar – Norwegian organisation for oral history)
- பின்முறிப்பு மற்றும் மேற்கோள்