நோக்கம்
தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பேணிப் பாதுகாத்தல், கடத்துதல் மற்றும் பரப்புதல் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல்.
இலக்கு
- ஆவணப்படுத்தல், ஆவணக்காப்பகப்படுத்தல், கடத்துதல் மற்றும் பரப்புதல் பற்றிய ஆவணக்காப்பக விழிப்புணர்வை ஏற்படுத்த வள உதவிகளை உருவாக்குதல்.
- புலம்பெயர் தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தல், ஆவணக்காப்பகப்படுத்தல், பேணிப் பாதுகாத்தல் மற்றும் பரப்புதல்.
- வரலாற்று குழுக்கள், ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சிக் குழுமங்கள், தொழில்முறை விவரிப்பாளர்கள் / ஊடகங்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் கூட்டு திட்டங்களில் பங்கேற்க முன்முயற்சி எடுத்தல்.
எமது வரலாறு
எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. அதுவே எதிர்காலத்தில் எமது வரலாறாகின்றது. இந்த வலைத்தளத்தின் கதை 23. ஏப்ரல் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” என்ற முகநூல் பக்கமாக ஆரம்பித்தது. நோர்வே வாழ் தமிழர்களின் செயற்பாட்டில் உருவான வெளியீடுகளை அறிந்து கொள்ளவும் சேகரிக்கவும் ஒரு தளமாக இது உருவாக்கப்பட்டது. அத்துடன் நோர்வே நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் தமிழ்க் கல்வி சேவைகள் குறித்த வரலாற்றுத் தகவல்களை சேகரிக்கவும் உருவாக்கப்பட்டது. ஆனால் விரைவில் ஆவணக்காப்பு விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய முதன்மை தேவையைக் கண்டறியப்பட்டது. அதன் விளைவாக “‘ஆவணம்’ என்றால் என்ன?” என்ற முகநூல் இடுகைத் தொடர் 13. யூன் 2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
நோர்வே வாழ் தமிழ் ஆர்வலர் ஒருவரின் ஆலோசனையின் அடிப்படையில், “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” என்ற முகநூல் பக்கம் ஒரு வலைத்தளமாக பரிணமிக்க ஆரம்பித்தது. முதல் கட்டமாக, முகநூல் பக்கம் 07. யூலை 2020 அன்று “DsporA Tamil Archive” என்ற பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் 22. யூலை 2020 அன்று www.dspora.no எனும் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.
“DiasporA Tamil Archives” எனும் இன்றைய பெயர் 06.08.2021 அன்று அறிவிக்கப்பட்டு 21.08.2021 அன்று இன்றைய இணையத்தளம் வெளியிடப்பட்டது.
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகத்தின் பாத்திரம்
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகம் (DiasporA Tamil Archives) தமிழ் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாத்தல், கடத்துதல் மற்றும் பரப்புதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளம் சமூகக் காப்பக மற்றும் பங்கேற்பு செயல்பாடுகளில் (community and participatory movements) ஈடுபட்டிருக்கும் தனிநபர்கள், தமிழ் ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற அமைப்புகளுக்கான வள மையமாகும்.
- புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகம் (DiasporA Tamil Archives) ஆவணக்காப்பகப்படுத்தல் பண்பாட்டை ஊக்குவிக்கிறது. இத்தளம் புலம்பெயர் சமூக நிறுவன மட்டத்திலும் சமூக மட்டத்திலும் ஆவணக்காப்பக விழிப்புணர்வை உருவாக்குகிறது.
- புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகம் (DiasporA Tamil Archives) பரவலான அறிவைப் பேணிப் பாதுகாக்க ஊக்குவிக்கின்றது.
- புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகம் (DiasporA Tamil Archives) ஒவ்வொரு சமூக அமைப்பையும் ஒரு பதிவேட்டு மேலாளரை நியமிக்க ஊக்குவிக்கின்றது.
இந்த இணையத்தளத்தில் பதியப்படும் ஆவண விழிப்புணர்வு பதிவுகள் நோர்வே ஆவணச் சட்டத்தையும் மற்றும் நோர்வே தமிழர்களின் ஆவணங்களையும் அடிப்படையாக் கொண்டு இருந்தாலும், அனைத்து புலம்பெயர் சமூகத்தினருக்கும் மற்றும் ஏனைய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இந்த உள்ளடக்கம் பயனுள்ளதாக அமையலாம்.
நோர்வே ஆவணக்காப்புச் சட்டத்தின்படி, ஆவணங்களை உருவாக்க அல்லது பாதுகாக்க தனியார் நிறுவனங்களுக்கு கட்டாயக் கடமை இல்லை. எனவே ஆவணக்காப்புக் கடமை என்பது தனியார் அமைப்புகளின் தனிப்பட்டப் பொறுப்பாக உள்ளது. அதனால் தனியார் அமைப்புகளைச் சுற்றியுள்ள சமூகத்தின் வரலாறு, குறிப்பாக புலம்பெயர் சமூகங்களின் வரலாறு, விடுபட்டுப் போகும் அபாயம் உள்ளது. மொழி, பண்பாடு, வரலாறு, புலம்பெயர்வு, சமூக கட்டமைப்புகள், வாழ்வியல், தாயக வாழ்க்கை மற்றும் புலம்பெயர் வாழ்க்கை என்று பலதரப்பட்ட விடயங்களை ஆவணப்படுத்தும் தேவை உள்ளது. இருப்பினும், நோர்வேயில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள தனியார் தமிழ் நபர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளால் சிறிதளவில் ஆவணக்காப்பகப்படுத்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றது. இன்நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கவை. இவை சமகால மற்றும் எதிர்கால தலைமுறையின் சமூக வளர்ச்சியில் பாரிய பங்கைக் கொண்டுள்ளன.
காப்பக விழிப்புணர்வு பதிவுகளின் பேணிப் பாதுகாப்பு, அணுக்கம் மற்றும் பயன்பாட்டிற்கு வழிவகுக்கிறது. காப்பக ஆவணங்கள்அணுகக்கூடிய மற்றும் பொது பயன்பாட்டிற்கு கிடைக்கும்போது, வரலாறு நினைவில் கொள்ளப்படும். வரலாறு தொடர்ந்து வாழும். இல்லையெனில், சுவடிகள் தனியார் வீடுகளில் மறைத்து போய் நிரந்தரமாக இழக்கப்படும். பின்னர் வரலாறு மறக்கப்படும்.
“ஆவணம் எதிர்காலத்திற்கான அன்புக் குறிப்பு”
ஆவண ஆர்வலர் ஜேசன் ஸ்காட் எழுதிய “மெட்டாடேட்டா எதிர்காலத்திற்கான அன்புக் குறிப்பு” என்ற மேற்கோளின் தழுவல்
உருவாக்கம்│Creation: 27.07.2020
புதுப்பிப்பு│Update: 06.03.2022