அன்புள்ள ஒசுலோ நகர சுவடிகள் காப்பகம்


புகைப்படம்: ஒசுலோ நகர சுவடிகள் காப்பகத்தில் இருந்து Unn Hovdhaugen (இடது) மற்றும் Johanne Bergkvist (வலது) ஆகியோர் Deichman Linderud கண்காட்சியைப் பார்வையிடுகின்றனர் (DTA, 15/11/2022).
நேற்று, 15 நவம்பர் 2022 அன்று, “ஆண் ஆதிக்கம் செலுத்தும் உலகில் தமிழ்-நோர்வேயியப் பெண்கள்” எனும் கண்காட்சியைப் பார்வையிட வருகை தந்தமைக்கு நன்றி. இந்த Pop-up உருவப்படக் கண்காட்சி ஏப்ரல் 2022 இல் ஒழுங்கு செய்யப்பட்ட “எமது நாள்” நிகழ்வின் தொடர்ச்சி ஆகும். அதோடு “சுவடிகள் நாள் 2022” ஐயும் குறித்து நிற்கிறது.

இந்த கண்காட்சி பெறும் கவனத்திற்கும், தமிழ்-நோர்வேயிய குடியேற்ற வரலாற்றை ஒசுலோ நகர சுவடிகள் காப்பகத்தில் நீண்டகாலப் பேணிப் பாதுகாப்பு தொடர்பாக பெறும் ஆர்வத்திற்கும் நோர்வேயில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சார்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நோர்வேயில் 66 ஆண்டுகால தமிழர்களின் புலம்பெயர்ந்த வரலாற்றின் ஒரு சிறு பகுதியாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. 11 உருவப்பட சுவரொட்டிகளில் உள்ள தமிழ்-நோர்வேயியப் பெண்கள் நோர்வேயில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒரு சில தமிழ் அமைப்புகள்/முயற்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். என்றாலும் அவர்கள் ஒரு பன்முகத்தன்மையான தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அதோடு தமிழகத்தை அல்லது தமிழீழத்தை வேராகக் கொண்டு, நோர்வேயில் குடியேறிய, பிறந்த அல்லது வளர்ந்த அனைத்து தமிழ்-நோர்வேயியப் பெண்களின் நினைவாக காந்தள்/ கார்த்திகைப் பூ/ செங்காந்தளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சங்க காலத்திலிருந்தே (கிமு 600 – கிபி 300) காந்தள் மலர் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டில் ஒரு பகுதியாக இருந்ததைக் காட்டும் தமிழ் இலக்கியக் குறிப்புகளின் அடிப்படையில் இந்த மலர் தேர்ந்தெடுக்கப்பட்டது. காந்தள் தமிழகத்தின் மாநில மலரும் தமிழீழத்தின் (வட-கிழக்கு இலங்கை) தேசிய மலரும் ஆகும்.
உருவப்பட சுவரொட்டிகளில் உள்ள ஆளுமையான இளம் மற்றும் மூத்த பெண்கள், நோர்வேயில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை கட்டியெழுப்பிய விவரிக்க முடியாத மகத்தான தன்னார்வப் பணியின் முகம் ஆகும். உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் இது பொருந்தும். இக்கண்காட்சியானது தமிழ் அமைப்புகளிலும், பொதுவாக தமிழ் சமூகத்திலும் உள்ள பல வைராக்கியம் கொண்டவர்கள் (zealots), தன்னார்வப் பணி புரியும் பெண்கள் மற்றும் ஆண்களின் உழைப்பின் வியர்வை, இரத்ததின் வெளிப்பாடாகும். நோர்வேயிலும் உலகெங்கிலும் செழுமையான புலம்பெயர்ந்த தமிழர் வரலாறு உருவாவதற்கு ஆதாரமாக அமைந்த பல கண்ணீர் துளிகளின் ஒரு சிறு துளிதான் இந்தக் கண்காட்சி. இறுதியாக, இது ஒசுலோ மற்றும் நோர்வே வரலாற்றை பொருத்தும் புதிர் விளையாட்டில் ஒரு சிறிய புதிர்க் கட்டையாகும்.
ஒசுலோ நகர சுவடிகள் காப்பகத்தின் கவனத்தையும் ஆர்வத்தையும் நோர்வேயில் உள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தின் கைகளில் கொடுக்க விரும்புகிறோம். இந்த வரலாற்றை உருவாக்கியவர்கள் அவர்கள். உருவாக்கிய வரலாற்றை உங்களுக்கும் முழு நோர்வே நாட்டிற்கும் காட்சிப்படுத்த எங்களுக்கு அவர்களே வாய்ப்பளித்துள்ளனர்.
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் (DiasporA Tamil Archives – DTA) என்பது ஒரு இணையவழி வள மையமும் சமூகக்குழுச் சுவடிகளுமாகும் (Community Archives). புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்களின் பணி நோர்வேயில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஒரு கொண்டாட்டம் ஆகும். இப்பணியின் சமகால, எதிர்கால வேலைத்திட்டங்களிற்கு நோர்வேயில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் சமூகத் தன்னார்வத் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுளின் ஆதரவு, பங்களிப்பு, ஒத்துழைப்பு மற்றும் ஊக்குவிப்பிற்கு இத்தருணத்தில் நன்றிகளை தெரிவிக்கிறோம்.
அன்புடன்,
நாம் அனைவரும்
புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள்
கண்காட்சி பற்றிய மேலதிக தகவல் இங்கே.

புதுப்பிப்பு│Update: 24.11.2022